இன்று திங்கட்கிழமை நண்பகல் திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் இருபதுக்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளிப் பிரதேசச் செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடைச் சந்தியில் நிரந்தர சோதனைச் சாவடியை அமைத்துள்ளனர்.
சோதனைச் சாவடியை அமைத்துத் தேடுதல் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். அத்துடன் கனரக இராணுவ வாகனம் ஒன்றில் வந்த சுமார் நாற்பதுக்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மையவாடியில் தேடுதல் நடத்தினர். வீதியால் சென்ற மக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அம்பாறையில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது தடவையாகவும் பாரிய தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நாவிதன்வெளியில் நிரந்தர சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.