இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கோட்டபாயவின் இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையது- கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

வெடிகொழுத்தி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி-
பதிப்பு: 2019 ஒக். 04 18:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 01:30
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஒற்றையாட்சி அரசின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்ட முறை சட்டத்திற்கு மாறானது எனவும் குடியுரிமையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கையொப்பத்தோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் பெறப்பட்ட இலங்கைக் குடியுரிமை சட்டவலுவுடையதெனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டதும் கொழும்பில் வெடிகொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது. வீதியால் சென்றவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளான சிங்கள மக்கள் கூடியிருந்தனர்
 
கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமைக்கு எதிரான மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் புதன்கிழமை ஆரம்பித்து நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Gotta-04
இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் குடியுரிமை சட்டவலுவுடையதெனக் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய பின்னர், கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவருடை இல்லத்திற்குச் சென்று சந்தித்துக் கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்தபோது எடுக்கப்பட்ட படம் இது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, சட்டத்தரணி காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஓகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த வாரம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று வழங்கப்படும் தீர்ப்பில் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டால் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட முடியாதென எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அவருடைய சகோதரரான சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.