வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம், இன்று புதன்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள ஆட்சியாளர்களை நிராகரி்ப்பதாகக் கூறியுள்ள சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த கொள்கையோடு தமிழ் வேட்பாளரின் மீன் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈழத் தமிழ் மக்களின் தொடர்ச்சியான அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துக் காண்பிக்க இந்தத் தேர்தலில் அனைவரும் மீன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மீன் சின்னம் சுயேற்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தமிழகம் திருச்சியில் கடந்த இருபத்து ஐந்தாம் திகதி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து மரணமான சிறுவன் சுர்ஜித்திற்காகவும் நேற்றுச் செய்வாய்க்கிழமை நெடுங்கேணியில் இரண்டு குழந்தைகள் அகால மரணமடைந்தமைக்காகவும் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்கள்.