இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்
பிரச்சாரத்துக்காக பிரதான வேட்பாளர்கள் இருவர் 760 மில்லியன் ரூபாய்கள் செலவு
தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு கேந்திரத்தின் கூட்டிணைப்பாளர் மஞ்சுள தகவல்
பதிப்பு: 2019 ஒக். 31 22:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு:
நவ. 01 03:32
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இதுவரை பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவற்றில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எழுநூற்றி 60 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தப் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் அச்சு ஊடகங்களுக்காக 48 மில்லியன் ரூபாயையும் மின்னணு ஊடகங்களுக்காக நாநூற்றி 32 மில்லியன் ரூபாய்களையும் செலவிட்டார்.மற்றைய பிரதான வேட்பாளர் அச்சு ஊடகங்களுக்காக நூற்றி 29 மில்லியன் ரூபாய்களையும் மின்னணு ஊடகங்களுக்காக நூற்றி 51 மில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளார் என மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய முப்பத்து மூன்று வேட்பாளர்களும் இதுவரை இரண்டு மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு கேந்திரத்தின் தேசிய கூட்டிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்திய, சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பிரதான வேட்பாளர்களின் பின்னால் நின்று செயற்பட்டு வரும் நிலையில் இவ்வளவு தொகைப் பணம் பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.