எனினும் எதிர்வரும் எட்டாம் திகதி சஜித் பிரேமதாச கிளிநொச்சியில் வேறொரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்தவுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூடக் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த விடயங்கள் பற்றிப் பேசி வருகின்றனர்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக ஏறிப் பிரச்சாரம் செய்வது போன்று, தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மேடைகளில் ஏறி இதுவரை பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை.
ஆனால் எதிர்வரும் எட்டாம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் சஜித் பிரேமதாச நடத்தவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மேடை ஏறுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் நிரந்த அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்த விடயத்தில் சஜித் பிரேமதாசவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுக்கள் எதனையும் நடத்தவில்லை. சஜித் பிரேமதாசவும் கூட்டமைப்பைச் சந்திக்க விரும்பவில்லை.
அத்துடன் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்த பதின்மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை ஏற்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே நிராகரித்திருந்தது. அது பற்றி சஜித் பிரேமதாச எதுவுமே கூறவில்லை.
இந்த நிலையில். நிரந்தர அரசியல் தீர்வுக்கு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதோடு இலங்கை நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்குக் குறைந்தது நூற்றி 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்து தாருங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
ஆனால் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இடம்பெறும் தேர்தல்பிரச்சார மேடைகளில் சஜித் பிரேமதாசவுடன் ரணில் விக்கிரமசிங்க இதுவரை ஏறவில்லை. தனித்தனியாகவே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, சஜித் பிரேமதாச கண்டியில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்று கூறியுள்ளார். ஆனால் வேறு எதுவும் கூறப்படவில்லை.
எனினும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விட சிறந்தது என்று சம்பந்தன் கூறியுள்ளார்.