தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
சுமார் ஏழு மணி நேரமாக இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தொடர்பாக தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஐந்து கட்சிகளின் கூட்டத்தில் பதின்மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆவணமாக வெளியிடப்பட்டிருந்தன.
இந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்றும் அப்போது கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆவணத்தை ஏற்க முடியதென சிங்கள அரசியல் கட்சிகளின் இரண்டு பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்கு முன்னர், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.