ஜனாதிபதித் தேர்தலில் தமது நிலைப்பாடு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் காலம் காலமாக சிங்கள அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்த நிலையில் உறுதிமொழிகள் எதுவும் இன்றி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
நாளை புதன்கிழமை தமது முடிவை அறிவிக்கவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார். நேற்றுத் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டுமே தவிர தனித்து முடிவெடுக்கும் சக்தியாக மாறிவிட முடியாதெனவும் கூறினார்.
பல்கலைகழக மாணவர்கள் அவர்களுடைய திறமைகளின் அடிப்படையில் பிரதான ஐந்து கட்சிகளையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றார்கள். ஆனால் அந்த ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படும் வகையில் தமிழரசுக் கட்சி செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புளெட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தனும் கண்டித்துள்ளார். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவையே புளொட் அறிவிக்குமென புளெட் தகவல்கள் கூறுகின்றன.
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க முடியாதென்றும் தமிழ் மக்கள் தாங்களாகவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஏலவே கூறியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டுமென கூறியுள்ள நிலையில் அது தொடர்பான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது.