எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட கும்பல் ஒன்றைக் கலைப்பதற்காகவே மெய்ப்பாதுகாவலா் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
காயமடைந்த இரண்டு பொதுமக்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை ஆயிரத்தி 340 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறியிருந்த நிலையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எஸ்.பி.திஸாநாயக்காவின் வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர் இருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எஸ்.பி.திஸாநாயக்கா, ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.