சிவாஜிலிங்கம் நல்ல மனிதர். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர். தமிழ்த் தேசியப் பற்றாளர் எனவும் அவர் கூறினார்.
இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நடத்திய போராட்டங்களின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் அமைதியாகவே இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாபங்களுக்காகவே செயற்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் தமது சுயநல நோக்கில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இது சுயநலமான அறிவிப்பு என்றார் அவர்.
தமது சங்கம் தெரிவிக்கும் சில கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சுயநல அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றது. அதனைத் தமது சங்கம் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் கால அவகாசம் வழங்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமை துரோகமான செயற்பாடாகும். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் திறப்பதற்கும், அதன் கிளை அலுவலகத்தைத் தாயகப் பிரதேசங்களில் திறப்பதற்கு அனுமதித்தமையும் தவறானதென்று லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று ஜெனீவா கூட்டத் தொடரில் வெளி்நாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆங்கில மொழியில் உரையாற்றும் போது தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.