பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களுக்கு இடையிலான மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்ற வியாழக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலும் தொழில்நுட்ப சேவைகள், சட்டம் சம்பந்தப்பட்ட பரஸ்பர உடன்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியொருவர் கூறினார்.
அதேவேளை, ஸ்ரீ;லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.
பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசப்படும் இந்தியா தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.