இம்முறை முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகளை எண்ணும் நேரம் மேலும் அதிகரிக்கலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளர்.
பிரதான வேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டு அவர்களுக்குரிய வாக்குகளின் விகிதாசாரம் போதியதாக இல்லையென்றால் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் இதனால் தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை பதினெட்டாம் திகதி நண்பகல் அளவிலேயே வெளிவரும் எனவும் மகிந்த தேசப்பிரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதேவேளை தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை முப்படையினரும் பிரதான நகரங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறிய மகிந்த தேசப்பிரிய முறைப்பாடுகளை உடனுக்குடன் பதிவு செய்வதற்கு விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை மூவாயிரத்து 627 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வன்முறைகள் கூடுதலாக இடம்பெறலாம் எனக் கருதப்படும் பிரதேசங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.