இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்-

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கொழும்பு உட்பட தமிழர் பிரதேசங்களிலும் கடமை

இலங்கையின் எந்தப் பகுதிகளுக்கும் சென்றுவர அவர்களுக்கு அனுமதியென தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்
பதிப்பு: 2019 நவ. 15 14:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 16 01:28
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்காணிப்பாளர்கள் குழுக்களின் தலைமைச் செயற்பாட்டாளர்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதேவேளை, கண்காணிப்பாளர்களில் ஒரு பகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுள்ளனர்.
 
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுக்கும் மற்றும் தீவுப் பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக கொழும்பில் உள்ள கண்காணிப்பு அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.

வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் பயணம் செய்துள்ளனர். ஏற்கனவே அங்கு சென்றுள்ள உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள இடங்களை நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் பார்வையிட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸார் மாத்திரமே காவல் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் பிரதான வீதிகளில் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்தக் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். 21 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்புகள் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் இவர்கள் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.