இருபத்து இரண்டு தேர்தல் தொகுதிகளிலும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிட சில பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தும் வேறு சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனேகமான சிங்களப் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இரத்னபுர தொகுதியில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிரதான வேட்பாளர்களுக்கிடையே நிலவிய கடுமையான போட்டியினால் வாக்களிப்பு வீதம் சில தொகுதிகளில் அதிகரித்திருக்கலாமென அவதானிகள் கருதுகின்றனர்.
1982 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன 52.91 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச 50.43 சதவீத வாக்குகளை மயிரிழையில் பெற்றிருந்தார்.
1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன மக்கள் முன்னணியின் சார்பில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 62.28 சதவீதம் பெற்று இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்திருந்தார்.
1999 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 51.12 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சார்பில் 2005 ஆம் ஆண்டு போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று மயிரிழையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
2010 ஆம் ஆண்டும் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 51 சதவீதத்தைப் பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன 51.28 சதவீதம் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.
2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை ஐந்து மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன. ஆயிரத்து நூற்றி 78 நிலையங்களில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.