பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ச புனித தலங்களான ருவன்வெலி மகாசாய மற்றும் ஸ்ரீமாகபோதி ஆகிய விகாரைகளுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலேயே அமைந்துள்ளது. ஸ்ரீமகாபோதி, ருவன்வெலி மகாசாய ஆகிய இரண்டு விகாரைகளும் இணைந்து காணப்படுகின்றன. இந்த இரு விகாரைகளும் பௌத்த புனிதத் தலங்களாகும்.
இந்த விகாரைகள் அமைந்துள்ள வளாகத்தில் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் ஒரு பக்கம் நாநூறு அடி நீளமானது. ஒரு பக்கத்தில் மாத்திரம் நாற்பது தூண்கள் வரிசையாக உள்ளன. மொத்தமாக ஆயிரத்து அறுநூறு தூண்கள் இந்தக் கட்டத்தில் உள்ளன. இந்தத் தூண்கள் சிங்கள மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது.
அனுராதபுரம் இராஜ்ஜியத்தை சிங்கள மன்னர்கள் வெற்றிகரமாக ஆட்சி செய்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் தோற்கடித்தான். இதன் காரணங்களினாலேயே கோட்டாபய ராஜபக்ச இந்த விகாரையில் பதவிப் பிரமாணம் செய்ததாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ச ருவன்வெலி மகாசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.