பதினைந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான பதினைந்துபேர் கொண்ட புதிய அமைச்சரவையோடு இடைக்கால அரசாங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயற்படவுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சுப் பதவியை ஏற்கவுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமான், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகியுள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார். அது குறித்த கடிதம் ஒன்றை அவர் கையளித்துமுள்ளார்.
ஆனால் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாற்பத்து ஐந்து உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.