கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை அடுத்து மாவீரர் பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.
மாவீரர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்லக் கூடாதென யாழ் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மானிய ஆணைக்குழுவின் உத்தரவுக்கு ஏற்பவே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்ததாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இன்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணியுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எவரும் நிற்க வேண்டமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்பக்க வாசல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன.
ஆனாலும் அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு பிற்பகல் நான்கு மணிக்கு உள்ளே சென்ற மாணவர்கள் மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலித்துப் பொதுச் சுடரை ஏற்றினர்.
இலங்கைப் படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக வாளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அதேவேளை, கிளிநொச்சி தேராவில் பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பொதுச் சுடர் ஏற்றப்பட்டு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.