கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சென்ற புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்ரன வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் நல்லிணக்கச் செயற்பாடுகளில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை. கோட்டாபய ராஜபக்சவுடன் பேசத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ.ரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளதால், ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று அவசியம் எனவும் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான சி.ஆ ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள நிலையில், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களுக்கு சர்வதேச மத்தியஸ்த்தம் அவசியம் எனவும் அதற்கான கோரிக்கைகளை தமிழ்த் தரப்பு பகிரங்கமாக வெளியிடவில்லை எனவும் அரசியல் அவதானிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.