கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொழும்பு அரசியல் செல்வாக்குடன் அரச அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 டிச. 19 15:59
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு:
டிச. 20 10:33
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கவனஈர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புகள், பொது மக்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை இன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி நகரில் நடத்தினா். போராட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர்.
தமிழ் ஊடகவியலாளர்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.கொழும்பு அரசியல் செல்வாக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில அரச அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்படுவதாகவும் ஊழல் மோசடிகளுக்குத் துணைபோவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர்.
அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பாக எழுதும் ஊடகவியலாளர்களை இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அச்சுறுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர்.