ஐக்கிய நாடுகள் சபையின்
ஜெனீவாத் தீர்மானம் ஏற்புடையதல்ல- வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கோட்டாபய ராஜபக்ச
19 ஆவது திருத்தச் சட்டமும் ஆபத்தானதென்கிறார்
பதிப்பு: 2019 டிச. 19 22:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு:
டிச. 19 23:48
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானம் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது என்றும் ஜனாதிபதி கூறுகிறார். கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, 2016 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம் மிகவும் தவறானது என்றும் இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்கு அது ஆபத்தானது என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
அதேவேளை. அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துத் துறைமுகங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் எந்தவொரு வெளிநாடுகளும் எந்தவொரு துறைமுகத்தையும் தனியுரிமையாக்க அனுமதிக்க முடியாதெனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாக முன்னைய அரசாங்கம் வெளிநாடுகளோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களை பதவிக்கு வரும் புதிய அரசாங்கம் ரத்துச் செய்ய முடியாதென்றும் கூறினார்.
ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை புதிய அரசாங்கம் ரத்துச் செய்யவுள்ளதாக வெளியான செய்தி குறித்த கேள்விகளுக்குக் கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்கவில்லையென வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.