அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.
2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மீளாய்வு செய்கின்றனர். அதன் பின்னர் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக முடிவு ஒன்றை எடுக்கவுள்ளது.
ஜெனீவா அமர்வின்போது 30/1 தீர்மானத்தை ஏற்க முடியாதென்பதை இலங்கை அதிகாரிகள் முன்வைப்பார்கள் என்றும் இறைமையுள்ள நாடொன்றின் மீது எதனையும் திணிக்க முடியாதென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.
நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை ரத்துச் செய்யவுள்ளதாகக் கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.