ஆனாலும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜித்த சேனாரத்னவைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ராஜித சேனரட்னவை அவரது வீட்டிலும் மற்றும் அவருக்குரிய இடங்களிலும் தேடியும் அவரைக் கைது செய்ய முடியாத நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளதால் அவரைக் கைது செய்யவுள்ளமை தொடர்பான நீதிமன்ற அழைப்பாணை தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
இவ்வாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ராஜித்த சேனாரத்னவை சென்றபுதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். அவரது வீட்டில் அவர் மறைந்திருக்கலாம் என்க கருதி வீடும் சோதனையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜித சேனரட்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆட்களைக் கடத்திக் காணாமல் ஆக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த பல வெள்ளைவான்களில் ஒரு வெள்ளைவான் சாரதியை அழைத்து வந்து கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை ராஜித சேனரட்ன அமைச்சராக இருந்தபோது நடத்தியிருந்தார்.
இது தேர்தல்காலப் பிரச்சாரமாக இருந்தாலும் இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியே ராஜித சேனரட்னவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்தி புதிய அரசாங்கம் கூறுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க வாகன விபத்துத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேலும் பல முன்னாள் அமைச்சா்கள் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.