கொழும்பு டொரிங்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ராஜித சேனரட்னவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாதுகாப்பாக வைத்திருந்து கொழும்பு நாரஹோன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உதவியதாக அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சந்திரிகாவைக் கைது செய்யுமாறு பல சிங்கள அமைப்புகள் கொழும்பு ரொறிங்ரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பின்னர் ரஜித சேனரட்னவை ஒழித்து வைத்திருந்தமை தொடர்பாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்திரிகாவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற வேண்டுமெனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ராஜித சேனரட்னவின் வைத்திய நிபுணர் முபாரக் பொய்யான மருத்துவக் காரணங்களைக் கூறி சிகிச்சை அளிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள நவ சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத், வைத்தியர் முபாரக்கிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரியுள்ளாா்.
இலங்கை அரச சட்ட வைத்திய அதிகாரியொருவர் ராஜித சேனரட்னவை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் டான் பிரியசாத் கூறியுள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜித சேனரட்னவை இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் அவரை சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்ற முடியாதென வைத்திய நிபுணர் முபாரக் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே வைத்திய நிபுணர் முபாரக்கிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.