அத்துரலியே ரத்தன தேரர் சமர்பித்த தனிநபர் பிரேரணையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு முஸ்லிம் சிவில் அமைப்புகள் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவை, அவரது அமைச்சில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில் முஸ்லிம்கள் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை நீக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்றும் சிவில் அமைப்புகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் எடுத்துக் கூறியுள்ளன.
அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் விவாகம், விவாகரத்துத் தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டால் இனவாதக் கருத்துக்கள் மேலும் அதிகரிக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபா இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
எனவே, இந்தப் பிரேரணையை ரத்ன தேரர் மீளப்பெற வேண்டுமென பைசல் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்காகவும், பொதுக் கட்டளைச் சட்டத்திலும் மாற்றம் வேண்டுமென அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் முஸ்லிம் சமூகத்தினுடைய மார்க்க விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள், அச்சமூகத்தின் பங்குபற்றுதலுடனும், அனுமதியுடனுமே தீர்மானிக்கப்பட வேண்டுமென பைசல் முஸ்தபா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட விசேடமான அனுமதியாகக் கருத முடியாது. இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்களுக்கும் இவ்வாறான விசேட சட்ட ஒழுங்குகள் பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.
எனவே முஸ்லிம் சமூகம் விவாகம், விவாகரத்து மற்றும் ஏனைய கடமைகளை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வாழ்வதற்கு முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் உதவியாக இருக்கின்றது. இதனை நீக்க வேண்டுமென அத்துரலியே ரத்தன தேரர் கோரிக்கை விடுத்திருப்பது முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை அவர்கள் பின்பற்றுவதற்குத் தடையாக இருப்பதுடன் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும் அது பாதிப்பதாக சிவல் சமூக அமைப்புகள் கூறுகின்றன.
ஆனால் அத்துரலியே ரத்தன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் மார்க்கத்துக்கு எதிரான தனிநபர் பிரேரணை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மௌனமாக இருப்பதாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கண்டித்துள்ளன.
அத்துரலியே ரத்தன தேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதுடன் வடக்குக்- கிழக்கும் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலை வைப்பது, விகாரை கட்டுவது போன்ற பல்வேறு அடிப்படை உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.