திருகோணமலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் இவர்கள் இருவருக்கும் தொடர்புள்ளதாகவும் இதனாலேயே இருவரையும் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் உறவினர்களிடம் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து உறவினர்களிடம் எதுவுமே கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கை விசேட அதிரடிப்படையினரும் அவ்வப்போது தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிபொருட்கள் அல்லது ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி பலர் கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால் வெடிபொருட்கள், ஆயுதங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லையென உறவினர்கள் கூறுகின்றனர். இவ்வாறான கைது நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ், வவுனியா, மட்டக்களப்பு கிளை அலுவலகங்களில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை.
வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளை கொதி நிலையில் வைத்திருப்பதற்கும் இலங்கைப் படையினரின் முகாம்களை மேலும் அதிகரிக்கும் நோக்கிலுமே இவ்வாறான தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.