மட்டக்களப்பிலிருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை வெளி உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்ற செய்தியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஊடக ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அநாமதேயமாக துண்டுப்பிரசுரங்களை அலுவலகத்துக்குள் வீசி ஊடகவியலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கும் நசுக்குவதற்குமான முயற்சியாகவே மட்டக்களப்பு ஊடக அமைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது.
பல்வேறு சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பிரதேசங்களில் நடைபெறுகின்ற விடயங்களை வெளிப்படுத்திவரும் வேளையில் அச்சுறுத்தல் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் ஒன்றியம் கூறியுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள செய்தியாளர்களுக்கெதிராக விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம் என்பது கேட்டுப் பெறவேண்டியதல்ல. இவ்வாறான செயற்பாடுகள் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே அமையும் ஒன்றியம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.