சுதந்திர தின நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இராணுவ நிகழ்வுபோன்றே இன்றைய சுதந்திர தின நிகழ்வு அமைந்ததாக கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாதமை தொடர்பாக மலையகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டிருந்தனர். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கவலை வெளியிட்டிருந்தார்.
தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
ஆனால் 2015 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து செயற்பட்டமைதான் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிகழ்ச்சிநிரலை ஏற்றுச் செயற்பட்டதனால், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இயல்புக்குத் தமிழ் மக்கள் கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.