இந்தச் செய்தியாளர் மாநாட்டில் காணி அபகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியமர்ந்த போது அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பாதுகாக்கப்பட்டிருந்த நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டிருந்தாக அவர் சுட்டிக்காட்டினார்.
அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான புள்ளி விபரங்கள் இருக்கின்றன. மூவாயிரத்து 744 ஏக்கர் காணிகள் அங்கு பறிக்கப்பட்டன. பிரதமர் தன்னுடைய உரையில் 408 ஏக்கர் காணி, அதுவும் நூற்றி மூன்று பேர் பயிர் செய்ததாகவும் சிங்கள மக்களுக்கு அந்தக் காணிகள் பகிரப்படவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
உந்திராயன் குளம் என்ற தமிழ்ப் பிரதேசதத்தில் 264 ஏக்கர் அபகரிக்கப்பட்டு நெலும்வௌ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆமையன்குளம் 360 ஏக்கர், அடையக்கறுத்தான் குளம் 75 ஏக்கர், சாம்பல்குள வயல் 300 ஏக்கர் என 899 ஏக்கர் நிலம் குளத்தோடு சம்பந்தப்பட்ட வயல்களாகும்.
இவற்றில் 360 ஏக்கர் கொண்ட ஆமையன்குளத்தை 103 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியில் புனரமைப்புச் செய்து முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் குளத்தை கிரிவன்வௌ என்று பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களிடம் கையளித்தமை அனைவரும் அறிந்ததாகும்.
இங்கு 360 ஏக்கர் குளத்திலேதான் தமிழ் மக்கள் விவசாயம் செய்தனர்.இந்த நிலையில் 900 ஏக்கர் நிலம் வரை காடுகளை அழித்தும் வேறு வளங்களை எடுத்தும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாள மூவாயிரத்து 744 ஏக்கர் காணியுடன் விஸ்தரிக்கப்பட்டு பதினோராயிருத்து 232 ஏக்கர் காணிகள் மகாவலி எல் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளார் என்று ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.