ஹைதராபத் நகரத்தில் அமைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நரேந்திரமோடியும் சந்தித்து உரையாடியிருந்தனர். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.
ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு நாநூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் வழங்க இந்தியா இணங்கியிருந்தது. அந்த உதவிகளை உடனடியாக வழங்குவதாக மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா இன்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு வேண்டிய உடனடி உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச புதுடில்லியில் விளக்கமளித்திருந்தார்.
இந்தியா வழங்கும் கூடுதல் நிதியுதவிகளைப் பொறுத்தே, இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இந்தியாவுக்கு இலங்கை உதவியளிக்குமென கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லியில் வைத்துக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச ஈழத் தமிழர் விவகாரத்தில் புதிய அரசாங்கம் கையாளவுள்ள அணுகுமுறைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாறாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் விரும்புவதாகவும் அதற்குரியவாறு புதிய அரசாங்கம் அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் மகிந்த ராஜபக்ச அங்கு கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.