இந்தப் புதிய கூட்டணி தொடர்பாக நீண்ட நாட்களாகப் பேசப்பட்ட போதும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும் பின்னர் ஏற்பட்ட இணக்கத்தையடுத்து புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணி தமிழ் மக்களின் கொள்கை சார்ந்து செயற்படுமென விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டணி செயற்படுமென சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோரும் கூறியுள்ளனர்.
ஆனால் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமது கூட்டணி போட்டியிடும் என்பது குறித்து இதுவரை எதுவுமே கூறப்படவில்லை. இதேவேளை, தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகள் தமிழ் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டாக மாத்திரமே இந்தக் கூட்டணி அமைந்துள்ளதா என்று அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.