ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியல் கூட்டணியில் இணைய மறுப்பதால் கட்சியின் யானைச் சின்னத்தை புதிய அரசியல் கூட்டணி பயன்படுத்த முடியாதென்றும் இதனால் புதிய சின்னம் ஒன்றைத் தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளக முரண்பாடுகள் காரணமாகவே செயற்குழுக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை கூடவிருந்த நிலையிலேயே கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரதான அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறைமுகமாக ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷர டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடும் அபாயம் நெருங்கியுள்ளதாகவும் இதற்கு கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய அரசாங்கமே காரணம் என்றும் ஹர்ஷா டி சில்வா மேலும் கூறுகிறார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஏனைய சிறிய கட்சிகள் அனைத்தையும் பிளவுபடுத்தி அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி பொதுவான பௌத்த தேசியவாதக் கட்டமைப்பு அரசாங்கத்தை அமைக்கவே கோட்டாபய ராஜபக்ச விரும்புவதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.