இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பம் மீதான பயணத் தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அறிவித்த பின்னர் சென்ற வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சு இலங்கையின் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டு நேரடியாகவே ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் நன்மதிப்பைப் பேணியவர் என்று அமைச்சர் தினேஸ் புகழாரம் சூட்டி அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளித்தாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் இலங்கையின் ஆட்சேபைனையை அமெரிக்கத் தூதுவர் ஏற்கவில்லை என்றும் எனினும் அமெரிக்க இலங்கை உறவில் மாற்றம் இருக்காதென்றும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுமெனவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கூறியதாக அறிய முடிகின்றது.
இந்தச் சந்திப்பும் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் பேசப்பட்ட வியடங்கள் எதுவும் கூறப்படவில்லை.
சந்திப்புத் தொடர்பாக கொழும்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் ஊடகங்களுக்கு எதுவுமே கூற விரும்பவில்லை.