43ஆவது கூட்டத்தொடரில் இந்திய கலந்துகொள்கின்றது. ஆனால் இதுவரையும் இலங்கை குறித்த பிரேரணையில் இருந்து வெளியேறியமை தொடர்பாக எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை.
இலங்கையில் மனித உரிமைகளைப் பேணி மீள்நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்து அதீத கவனம் செலுத்தும்படி இலங்கையை வற்புறுத்திக் கோருவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலவலகத்துக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இந்த முடிவு கனடாவை ஆழ்ந்த அதிருப்தியில் ஆழத்தியிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப்சம்பைன் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்று இடம்பெறவுள்ள விவாதத்தில் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை மீது கண்டனத்தை வெளியிடுவர் என்று ஜெனீவாத் தகவல்கள் கூறுகின்றன.
தீர்மானத்தில் இருந்து இலங்கை வெளியேறியுள்ள நிலையில், தமக்குரிய நீதியை சர்வதேச நாடுகளே பெற்றுத்தர வேண்டுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டப் பிரதிநிதி கனகரஞ்சி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணித்து வந்திருந்த Sri Lanka- Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர் குழு, இன்று ஜெனீவா ஊடக மையத்தில் தனது அறிக்கையினை வெளியிட்டிருந்ததோடு, ஊடக மாநாட்டினையையும் நடாத்தியிருந்தது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றஙப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் கேட்டு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கையின் அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, உரையாற்றிய சில மணிநேரங்களில் சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அறிக்கையின் இறுதிப் பரிந்துரை இலங்கையை சா்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாதுகாப்பு சபை பாரப்படுத்த வேண்டுமெனக் கோரப்பட்டிருந்தது.
அதில், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், சா்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஜெனீவா மனித உரிமைச் சபையின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐநா பாதுகாப்புச் சபை ஓராண்டுக்குள் இலங்கையை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என விரிவாக கூறப்பட்டிருந்தது.