இது தொடர்பாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாடசாலைகள் மூடப்பட்டாலும் தமது பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு பல வருடங்களாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரையும் பதவியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் கவனத்தில் எடுக்கவில்லை.
இது தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் சென்ற ஏழாம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்குச் செல்லாது வகுப்புகளை புறக்கணிப்பதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அனைத்துப் பாடசாலைகளுக்கும் கொரேனா வைரஸ் பரவுவதைக் காணரம் கூறி ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அரசாங்கம் முதலாம் தவனைக்குரிய விடுமுறையை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அதுவும் மாணவர்களுக்குத் தொற்றுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் திடீரெனப் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டமை தொடர்பாக தமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென்று ஜோசப் ஸ்ராலின் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது உண்மையான காரணமாக இருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்கள். அதிபர்களின் மூன்று நாள் போராட்டத்தைக் குழப்புவது மற்றுமொரு நேரக்கமாக இருக்கலாமெனவும் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.