பதிப்பு: 2020 மார்ச் 14 21:40
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு:
மார்ச் 15 23:41
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயகமான வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலைகளின் பணிகளை உடனடியாக இடைநிறுத்தமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே தற்காலிகமாக குறித்த இரு மாவட்டங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை மூட வேண்டுமென அரச அதிபர்களிடம் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த இரு மாவட்டங்களிலும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா தனிப்பட்ட முறையில் இரண்டு மாவட்ட அரச அதிபர்களிடமும் கடிதம் எழுதிக் கோரியுள்ளார்.
அங்கு பணியாற்றும் 15 ஆயிரம் ஊழியர்களும் தமிழர்கள். அவர்கள் ஏலவே போரால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கும் உள்ளாகி மேலும் இழப்புகளைச் சந்திக்கத் தயாராக இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது