கிழக்கு மாகாணம் தமிழர் தாயகப் பிரதேசமான மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில், பிரித்தானியாவில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருகை தந்த 62 வயதான நபர் ஒருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாக இன்றிரவு அவர் கொழும்புத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த இன்னும் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை புதன்கழமை மருத்துவ அறிக்கை கிடைக்கத்தவுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்ரர் கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக வருகை தந்த அனைவரும் அவர்கள் தங்கியுள்ள பிரதேசங்களில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்குப் பொலிஸார் நாளை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளன.
கொழும்பு நகரம் நாளை புதன்கிழமை முதல் விசேட பாதுகாப்புக்காக முடக்கப்படலாமென இலங்கைப் பொலிஸ் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுத் திங்கட்கிழமை அரச தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படடிருந்த விடுமறை எதிர்வரும் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாகக் கொழும்பு நகரம் மக்கள் நடமாட்டங்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள், ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு முதல் கட்டுநாயக்கா விமான நிலையம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.