நேற்று்ச் சனிக்கிழமை முதல் களுத்துறை மாவட்டத்தில் 20 ஆயிரம் போ் வாழும் பிரதேசம் ஒன்றும் சுற்றிவளைக்கப்பட்டு தடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் இரு பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வடமாகாணம் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை ஊரங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளதால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. புதுக்குடியிருப்புப் பொதுச்சந்தை மற்றும் நகர் கடைத் தொகுதிகள், உடையார்கட்டு பொதுச்சந்தை, விசுவமடு பொதுச்சந்தை, திருமுருகண்டி கடைத் தொகுதிகள் மற்றும் ஆலய வளாகம் ஆகிய பகுதிகளிலும் தொற்று நீக்கல் நடவடிக்கை இடம்பெற்றது.
அத்துடன், மாங்குளம் சந்தை மற்றும் நகர்ப்புற கடைத் தொகுதிகள், ஒட்டுசுட்டான் நகர்புற கடைத் தொகுதிகள் மற்றும் பொதுச்சந்தை, கற்சிலைமடு பொதுச்சந்தை ஆகிய பகுதிகளிலும் பிரதேச சபையினரால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. தொற்றை நீக்கக் கூடிய மருந்துகள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ச்சியாக அமூலில் உள்ளன.
ஏனைய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எட்டு மணிநேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேற்படி மாவட்டங்கள் அதி உச்ச அபாய வலையமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
அதேவேளை, வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் இளையோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளித்து வருகின்றனர். தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் பிரதேசங்களிலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இலங்கை அரசாங்கத்தின் உதிவிகள் உரிய முறையில் கிடைக்கவில்லையென யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளே கூறுகின்றனர். இந்த நிலையில் பொது அமைப்புகளும் சுகாதார சேவை அதிகாரிகள், மருத்துவர்கள் பலரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக மக்கள் கூறுகின்றனர்.