உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றால் மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று கருத வேண்டியிருப்பதாகவும் கூறிய மகிந்த தேசப்பிரிய, அரசாங்கம் விரும்பினால் தேர்தலை நடத்த இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தலை உரிய காலத்திற்குள் நடத்தவில்லையானால் சட்டச் சிக்கல் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசியல் கட்சிகத் தலைவர்களைச் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை மே மாத இறுதிக்கள் நடத்தக் கூடிய சுகாதார நிலமைகள் இல்லையென இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்டால் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் மருத்தவர் சங்கம் கூறியுள்ளது.
இந்த நிலையில் மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்த முடியாதென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவும் கூறியுள்ளதால் கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமாக மூத்த அமைச்சர்களோடு கலந்தாலோசிப்பதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை, தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டத்தினால் பாரிய பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுமக்களுக்குப் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பலர் வேலையிழந்துள்ளனர்.
இதன் காரணமாகவும் தேர்தலை தற்போது நடத்த முடியாதென எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.