தேர்தலுக்கான திகதியைக் குறிப்பது அதனைப் பிற்போடுவது போன்ற சகல அதிகாரங்களும் ஆணைக்குழுவுக்கே உண்டு. ஆனால் அரசாங்கம் இந்த விடயங்களில் தலையிடுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ரட்ணஜீவன் கூல் கூறுகிறார்.
தேர்தல் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக நாளை திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு பொலிஸ் மா அதிபர், இலங்கைப் படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நடத்துவது தொடர்பான கூட்டத்திற்குப் பொலிஸாரையோ படையினரையோ அழைக்க வேண்டிய தேவை இல்லை என்று ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.
படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அளவுக்கு ஆணைக்குழுவின் மூன்று முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் கூறிய ரட்ணஜீவன் கூல், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் மயப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் எப்போது தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஆணைக்குழுவே திகதியை அறிவிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் தலையிடுவதாக ஏனைய அரசியல் கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன.
கொரேனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் அதிகமான மக்கள் வாக்களிக்க வெளியே வராமட்டார்கள். எனவே விகிதாசாரத் தேர்ல் முறையைப் பயன்படுத்திக் குறைந்தளவு வாக்குகளுடன் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றலாமென அரசாங்கம் எதிர்பார்த்தே தேர்தலை அவசர அவசரமாக நடத்தத் திட்டமிடுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தைத் தவறனது என்றும் இலங்கை ஒற்றையாட்சி அரசை நியாயப்படுத்தியும் சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்து வந்துவர். அரசியல் போராட்டத்தை மலினப்படுத்தும் கருத்துக்களையும் பகிரங்கமாகவே வெளியிட்டு வந்தவர்.
ஆயுதப் போராட்டம் உச்சமடைந்திருந்த காலத்தில் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகவே இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.