களுத்துறை பேருவளைப் பிரதேசத்திலும் சுமார் ஐநூறு குடும்பங்கள் தொடர்ந்து 21 ஆவது நாளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேருவளையில் இன்று நான்கு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கெசல்வத்தையில் ஆயிரத்து பத்துப் பேர் நேற்று்ச் செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் கொழும்பு 12 பகுதியில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையான பிரதேசங்கள் சுற்றி வளைக்கப்பட்டுத் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளன.
கொழும்பில் களனி பேலியகொட மீன் சந்தை மூடப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டவேளையில் பொலிஸாரின் அனுமதியுடன் அங்கு மீன் வியாபாரம் இடம்பெற்றபோது அங்கு சென்ற பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசர அவசரமாக மீன் சந்தை மூடப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கம் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கூடுதலாக அதிகரிக்கக் கூடிய வாய்புள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்று இருக்கலாதெனச் சந்தேகிக்கும் பலர் வெளியே சென்றுள்ளதாகவும் அவர்கள் எங்கு ஒழிந்திருக்கின்றனர் என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லையெனவும் மருத்துவர் சங்கம் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவதுடன், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் பாரிய தாக்கம் இல்லையென வடமாகாண சுகாதாரத் திணைக்களம் கூறியுள்ளது. கொழும்பில் இருந்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற இளைஞன் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை, கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பில் இருந்து, பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்குத் தப்பித்து வந்த ஏழு பேர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். இவர்களை உடனடியாகக் கைது செய்து தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.