இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இழுபறி நிலை

உயர் நீதிமன்றத்தில் ஒன்பது மனுக்கள் தாக்கல்
பதிப்பு: 2020 மே 12 23:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 13 00:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் யூன் மாதம் நடத்த முடியாத அளவுக்குச் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தி தனது கட்சியின் சார்பில் கூடுதல் ஆசனங்களைப் பெற முடியும் என்ற நோக்கில் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச முற்படுவதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக தற்போதைக்கு எதுவுமே கூற முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் சென்றுவிட்ட நிலையில் யூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாதெனக் குறிப்பிட்டு ஒன்பது மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் முடிவடைந்த பின்னரே தேர்தல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஒன்பது மனுக்கள் பற்றிய உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சட்ட வியாக்கியானம் வெளிவர வேண்டும். எனவே எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை அறிவிக்க முடியும் என்றும் மகிந்த தேசப்பிரிய கூறினார்.

இதேவேளை, தேர்தலை நடத்தமால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி அதன் பதவிக்காலம் முடிவடையவுள்ள எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நாடாளுமன்றத்தை செயற்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகள் இன்றைய கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஏப்ரல் மாதம் 25 ஆம் நடைபெறவிருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுப் பின்னர் யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதென மகிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் மீண்டும் பிற்போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.