கொரோனா வைரஸ் பரவல் கடந்த மே மாதத்தில் இருந்து கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் இலங்கைச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜயசிங்க கூறியுள்ளார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொற்று புதிதாக ஆரம்பித்தள்ளதென்றும் ஆனாலும் அது சமூகப்பரவல் அல்ல எனவும் மருத்துவர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவளை ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கை இராணுவ அதிகாரி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் வாரத்தில இருந்து கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பகுதியாக இயல்பு நிலை வழமைக்கும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் வரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதனட்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.