நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் கூறியமை தேர்தல் விதிகளை மீறும் செயல் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் வேலை வாய்ப்பு என்பது ஆண்டுதோறும் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டியது. அதனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டமாகக் கருத முடியாது என்று அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார்.
தேர்தல் முடிவடைந்ததும் அரச நிறுவனங்களில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுமென இன்று புதன்கிழமை களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவி வகித்துக் கொண்டு கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாதென்பதை கோட்டாபய ராஜபக்ச அறியவில்லையா என்று கேள்வி எழுப்பிய அனுரகுமார திஸாநாயக்கா, வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென மக்கள் முன்னிலையில் உறுதியளிப்பது சட்டத்திற்கு முரணானதென்றும் குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோதே, அனுரகுமார திஸாநாயக்கா இவ்வாறு கூறினார். வேலை வாய்ப்புகள் தொடர்பாக உறுதியளிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.