பிசிஆர் பரிசோதனைகள், 14 நாள் தனிமைப்படுத்தல் எதுவுமேயின்றி இந்தக் குழுவினர் இலங்கைக்குள் பிரவேசித்ததுமட்டுமல்லாது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்தமை எந்த அடிப்படையில் என்றும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் அரசாங்கம் உரிய விளக்கம்தர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.
சீனாவிலிருந்து இலங்கைக்கு நேற்று வியாழக்கிழமை இரவு வருகைதந்த 26 பேரடங்கிய தூதுக் குழுவை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
சீனக் குழுவினர் இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோசதனை மாத்திரம் இடம்பெறுமெனவும் அந்தக் குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்றும் சுகாதா அமைச்சர் பவித்திர வன்னியாராட்சி நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
ஆனால் இலங்கைக்கு வருகை தந்த சீனக்குழுவினர் பிசிஆர் பிரிசோனைக்கு உட்படுத்தப்படாமலேயே வருகை தந்துள்ளனர். இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் கொழும்பில் தங்கியிருப்பர்.
இலங்கையின் சுகாதார நிலமைகள், குறிப்பாக கொரோன பரவலைக் கட்டுப்படுத்தும் ஆலோசனைகள், மற்றும் அதற்குரிய மருத்து உதவிகள் தொடர்பாக ஆராயவுள்ளனர். சீனக்குழுவில் சீன மருத்துவர்கள் சிலரும் உள்ளடங்கியிருப்பதாக இலங்கைச் சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, சீனாவிடமிருந்து பெற்ற கடன்களால் இலங்கை கடன்பொறிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், நாட்டின் அபிவிருத்திகள் மக்களின் ஜீவநோபாயம், பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக இருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சீனத் தூக்குழுவுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கூறியுள்ளார்.
சீன அரசாங்கம் எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவியளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்த கோட்டாபய, கடந்த போர்க்காலத்தில் சீனா வழங்கிய உதவிகளையும் நினைவுப்படுத்தினார்.