இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற தொனியில் அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறினார்.
சிறைச்சாலைகளில் நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா அச்சமும் தலைதூக்கியிருப்பதால் தமிழ் அரசியல் கைதிகளையும் பிணையிலாவது விடுதலை செய்வதற்கான ஆயத்தம் இருக்கின்றதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையில் கைதிகளே உள்ளனர் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியவர்களை அரசியல் கைதிகளாகக் கூறமுடியாது என்றும் அவரவர் சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கும் அறிக்கையை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் உதய கம்பன்வில மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்பதுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென சிங்களக் கிராமங்களில் தீவிர பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லையென மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது, பிரதி நீதியமைச்சராக இருந்த புத்திரசிகாமனியும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.