வடமாகாணம்

மன்னார் கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூவரில் ஒருவர் மாலைதீவில் சடலமாக மீட்பு

மாலைதீவுப் பொலிஸாரால் ஒருவர் உயிரோடு மீட்பு- மற்றையவரைக் காணவில்லை
பதிப்பு: 2021 பெப். 28 11:28
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 01 13:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் ஓலைத்தொடுவாயிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன மூன்று தமிழ் மீனவர்களில் ஒருவர் மாலைதீவின் ஆட்கள் நடமாட்டம் அற்ற தீவில் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அத்தீவிலிருந்து ஒரு மீனவரின் சடலமொன்றையும் மாலைதீவுக் கடற்படையினர் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் சுமார் இரண்டு வாரங்கள் கழிந்தும் மீண்டும் கரை திரும்பாத நிலையில் சக மீனவர்களும் உறவினர்களும் மன்னார் கடல் பிரதேசங்கள் எங்கும் அவர்களைத் தேடி வந்தனர்.
 
அத்துடன் இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இலங்கைப் பொலிஸ், இலங்கைக் கடற்படையினர் ஆகியோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரோடும் மற்றுமொருவர் சடலமாகவும் மாலைதீவில் மக்கள் வசிக்காத தீவொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 51வயதுடைய கண்ணன் என அழைக்கப்படும் அன்டன் யேசுதாசன், அன்டன் சிவதாஸன் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராஜ் ஜெயராம் மற்றும் மன்னார் தாராபுரம் கொண்னையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான கொட்வின் என அழைக்கப்படும் சந்தான் செபஸ்டியான் ஆகிய மூன்று தமிழ் மீனவர்களே கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் கண்ணன் எனப்படும் அன்டன் யேசுதாசன் கடந்த புதன் மாலைதீவு கடற்படையினரால் அங்குள்ள தீவொன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருடன் அத்தீவில் தங்கியிருந்த 23 வயதுடைய இளைஞரான பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராஜ் ஜெயராம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி மீனவர்கள் தமது மீன்பிடி படகின் எரிபொருள் தீர்ந்த நிலையில் தொடர்ச்சியாகப் 16 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி கடலில் தத்தளித்து மாலைத்தீவு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த தீவிலேயே இளைஞரான செல்வராஜ் ஜெயராம் மரணமடைந்துள்ளதாக இவர்களின் உறவினர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

ஓலைத்தொடுவாயிலிருந்து தொழிலுக்குச் சென்று எரிபொருள் தீர்ந்த நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஐந்தாவது நாளில் மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான கொட்வின் என அழைக்கப்படும் சந்தான் செபஸ்டியான் கடலில் குதித்து நீந்திக் கரை சேருவதற்கு முற்பட்டிருக்கிறார்.

ஆனால், படகில் இருந்த மற்றைய இரு மீனவர்களும் அதனைத் தடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி நள்ளிரவு, தானுப் தீவில் உயிரிழந்த மீனவரான பாண்டியன் என அழைக்கப்படும் செல்வராஜ் ஜெயராமும், படகில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவேளை படகில் இருந்த வெற்று எரிபொருள் கொள்கலனுடன் சந்தான் செபஸ்டியான் கடலில் குதித்து நீந்திச் சென்று பின்னர் காணாமல் போயுள்ளார்.

இத் தகவலை உயிரோடு மீட்கப்பட்டுள்ள அன்டன் சிவதாசன் மாலைதீவுப் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். உயிரோடு மீட்கப்பட்டுள்ள அன்டன் சிவதாசன் மாலைதீவு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இறந்த மீனவரின் சடலமும் அதே வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்களுக்கு மாலைதீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரோடு மீட்கப்பட்ட மீனவரை இலங்கைக்கு அழைத்து வரவும் இறந்த மீனவரின் சடலத்தை எடுத்துவருவதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டுமென மீனவர்களின் உறவினர்கள் மன்னார் மாவட்ட அரச அதிபர், மற்றும் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.