சுன்னாகத்தை சேர்ந்த 39 வயதான இராசவல்லவன் தபோரூபன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வழக்கு இடம்பெற்று சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தந்தை மனதளவில் பாதிக்கப்பட்டதுடன் நாளுக்கு நாள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். குறித்த மகனின் விடுதலைக்காக இவர் பல முயற்சிகளை மேற்கொண்டும் பயன் கிடைக்கவில்லை. மகனின் தண்டனைக்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடியவுள்ள நிலையில் தந்தையார் உயிரிழந்தமை உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அவர்களின் உறவுகள் 17 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். தற்போது உயிரிழந்த தந்தையின் மகனான தபோரூபனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையால் ஏனைய கைதிகளுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.