குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் மீனவர்களின் அடிப்படை உரிமை மீறல் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதிக்கான கேந்திர மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேமந்த விதானகே மற்றும் மொறட்டுவ, முகத்துவாரம் மீனவ சங்கப் பிரதிநிதிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, உரிய விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா கோரியுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தின் மீதும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பௌத்த அமைப்புகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. குறிப்பாக சிங்கள ராயவய என்ற பௌத்த அமைப்பு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடற் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டமை உள்ளிட்ட கேள்விகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் பதில் வழங்காமல் தப்பிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கப்பல் கடலில் மூழ்கிய விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தாலும், கப்பல் விவகாரம் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடெனவும் சுமந்திரன் கூறினார்.
இதேவேளை, எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மாலுமி உட்பட கப்பலில் பயணம் செய்த 13 அதிகாரிகளிடம் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கப்பலின் பிரதான பொறியியலாளர் மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
கப்பல் அதிகாரிகள், ஊழியர்கள் 25 பேரும் இலங்கையை விட்டு வெளியேற கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த 27 ஆம் திகதி சிங்கபூர் நோக்கிப் பயணம் செய்யத் தயாராக இருந்தபோதே இலங்கை் கடற்பரப்பில் தீக்கிரையானதாகக் கூறப்படுகின்றது.