மன்னார் நகரில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இன்று 41 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.
பணியை தொடர்ந்து மேற்கொள்ள நிதியில்லை என கூறப்பட்டுள்ள நிலையிலும் அகழ்வுப் பணி வேகம் குறைந்த நிலையில் இடம்பெற்று வருகின்றது.
அகழ்வுப் பணியின்போது 75 சென்றி மீற்றர் நீளமுடைய எலும்புக்கூடு ஒன்று மீட்க்ப்பட்டுள்ளது. சிறிய எலும்புக் கூடாக உள்ளமையினால் சிறுவருடையதாக இருக்கலாம் என அகழ்வுப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எலும்புக் கூடுகள் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள், துப்பரவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பொதி செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த மனிதப் புதைகுழி போர்க்காலத்துக்குரிய என அகழ்வுப் பணியில் ஈடுபடுவோர் கூறுகின்றனர்.
ஆனால், மேலதிக ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தப்படடும் வரை அதிகாரபூர்வமாக எதையும் கூற முடியாதென களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் பிரதிநிதிகளான ரஹீம் மிராக், கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோரே கொழும்பில் இருந்து மன்னாருக்கு வருகைதந்துள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டு செம்மணி பிரதேசத்திற்கு அருகில் கண்டபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மண்ணை பரிசோதனை செய்யுமாறு நீதிபதி சதிீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக மண்ணைப் பாிசோதனை செய்யாமலேயே விசானைகள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயகப் பிரதேசங்களில் மனித எலும்புக்கூட்டு, எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்த விசாரனைகளை முன்னெடுப்பதை தவிர்க்குமாறு இலங்கைப் பொலிசாருக்கு கொழும்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன