தமிழர் தாயகத்தில்

வீடமைப்பு விவகாரத்தில் சீன இந்திய அரசுகளின் போட்டி, இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுள்ளது

தமக்கு எதுவுமே தெரியாதென்கிறார் சம்பந்தன்
பதிப்பு: 2018 ஜூலை 25 22:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 25 23:51
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2009 ஆம் ஆண்டு இராணுவ உதவிகளை வழங்கிய சீன இந்திய அரசுகள், தற்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் விடயத்தில் முரண்பட்டுள்ளன. சீனா இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனரட்ன, தமிழர் தாயகத்தை நோக்கிய சீன. இந்திய மோதல் குறித்து விளக்கமளித்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் ராஜித சேனரட்ன, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடி முடிவெடுப்பார் எனவும் குறிப்பிட்டார்.

சீன வீடமைப்புத் திட்டத்தை ஏற்கக் கூடாதென சம்பந்தனுக்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கட்டளையிட்டதாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமான நிலையம் தொடர்பாக சீனாவும் இந்தியாவும் மோதிக்கொள்ளும் நிலையில், தமிழர் பகுதிகளில் வீடுகளை அமைக்கும் விடயத்திலும் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் இந்திய அரசு ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. அபோன்று ஐம்பதாயிரம் வீடுகளை வடக்கில் அமைப்பதற்கு சீன அரசும் விரும்பம் தெரிவித்து இலங்கை அரசிடம் விண்ணப்பித்துமுள்ளது.

இது குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் சீனாவின் உதவியுடன் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாதென தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிந்தார்.

இதேவேளை, சீன அரசு தமிழர் தாயகமான வடக்கில் 1.3 மில்லியன் ரூபாவில் வீடொன்றை அமைக்க முடியுமென கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசினால் கட்டப்படும் வீடொன்றுக்கு 2.2 மில்லியன் ரூபாய்கள் செலவாகின்றன.

ஆகவே 1.3 மில்லியன் ரூபாய்களில் வீடொன்றை கட்டிமுடிக்கலாம் என்றால் 2.2 மில்லியன் ரூபாய்களை ஏன செலவிட வேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், வீடு ஒன்றைக் கட்டுவதற்கான செலவு வேறுபாடுகளை விட சீன, இந்தியா ஆகிய இருநாடுகளிடையேயும் இராஜதந்திர பிரச்சினை இருப்பதாக இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் நாற்பதாயிரம் வீடுகள் மாத்திரமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சீனா. இந்தியா ஆகிய நாடுகளுடன் சமாந்தரமான உவுகளை பேணி வருவதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்ற ஐந்தாம் திகதி வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் வடக்கில் வீடமைப்பது குறித்து முரண்பட்டுக்கொள்வதாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாவே ஒப்புக் கொண்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவே சீன அரசு வடக்கில் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள விண்ணப்பித்ததாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன. ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையேயும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினாலும் சீன, இந்திய வீடமைப்புத் திட்டங்களிலும் குழப்பமான நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உயர்மட்டத்த தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் சீன வீடமைப்புத் திட்டத்தை ஏற்கக் கூடாதென சம்பந்தனுக்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கட்டளையிட்டதாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.