வடமாகாணம் முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் போர்க்கால ஆட்லறி ஷெல்

செயலிழக்கச் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு
பதிப்பு: 2021 ஜூலை 16 00:20
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 14:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத்தீவில் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமையன்று மண்ணில் புதையுண்ட நிலையில் ஆட்டிலறி ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆட்டிலறிக் குண்டு மிகப் பெரிய அளவில் காணப்பட்டதுடன் சுமார் 250 கிலோ நிறையுடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
குறித்த ஆட்லறி செயலிழக்க செய்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நீதிமன்ற அனுமதி கிடைக்கப் பெற்றதுடன் இலங்கை விஷேட அதிரடிப்படையினரின் ஆட்லறி வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மூலம் குறித்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சுனாமி நினைவு மண்டபத்திற்கு அருகில் ஆபத்தான வெடி குண்டுகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்றைய தினமே முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைக் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமோர் வெடிகுண்டுகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டன. இந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுப்படி குறித்த இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கை விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.

இதேவேளை கடந்த 14 ஆம் திகதி புதனன்று யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சரசாலை பகுதியில் ஆட்டிலறி ஷெல்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரசாலை பருத்தித்துறை பிரதான வீதி புனரமைப்பு பணிகளின் போது நிலத்தை தோண்டியவேளையே குறித்த மூன்று எறிகணைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.